சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும் A1 தொழில்நுட்பத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்த்தும் இடம் பெற உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் மொழி, கலாசாரம், சமூக நீதி மற்றும் திராவிட இயக்கத்திற்குக் குரல் கொடுக்கும் கருவியாக இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் முப்பெரும் விழா ஆகியவை இணைந்து இன்று மாபெரும் மாநாடு போல கொண்டாடப்பட இருக்கிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தல்லைமையில் நடைபெறும் இந்த விழாவில் திமுகவின் விருதுகள், தொண்டர்களுக்கான பணமுடிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்..

பெரியார் விருது- பாப்பம்மாள்; அண்ணா விருது- அறந்தாங்கி மிசா ராமநாதன்; கருணாநிதி விருது ஜெகத்ரட்சகன்; பாவேந்தர் விருது- கவிஞர் தமிழ்த் தாசன்; பேராசிரியர் விருது- விபி ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இந்த விருதை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.

இன்றைய மாநாட்டு பந்தலில் 80,000 பேர் அமரும் வரையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 18 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக கட்டப்பட்டுள்ளன. 11 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான A1 மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பவளவிழாவினை குறிக்கும் இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்திருந்தார். சென்னை அண்ணா அறிவாலயமும் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

இது தொடர்பாக திமுக தெரிவித்துள்ளதாவது: தமிழர் உரிமை காக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டமைத்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. போராட்ட மிகு இந்த பயணம் வரலாற்றுப் பெருவிழாவாகவும் கழகத்தின் பவள விழாவாகவும் கழக முப்பெரும் விழாவில் கொண்டாடப்படுகிறது.

அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலைக்கு புது வெளிச்சம் பாய்ச்சி, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிக் கொள்கை தமிழ்நாடு எங்கும் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையோடு செயல்படத் தொடங்கிய கழகம் இன்று பெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்து, பேரறிஞர் அண்ணாவின் வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காத்து, கழகத் தலைவரின் திராவிட மாடல் திட்டங்களைக் கழகம் செயல்படுத்தியதால் இன்றைய நவீன தமிழ்நாட்டின் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ்நாடு பெயர் தொடங்கி, மகளிர் மேம்பாடு, தமிழருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, உலகளாவிய கட்டமைப்புகள், தமிழ் மொழி வளர்ச்சிஎன அனைத்திற்குப் பின்னாலும் திமுகழகம் நடத்திய போராட்டங்களும், கழக அரசு கொண்டு வந்த திட்டங்களும், திராவிட கொள்கைகளும், கழகத் தலைவர்களின் முன்னெடுப்புகளும், கழக உடன்பிறப்புகளின் தியாகங்களும் தமிழ்நாட்டின் திரும்பும் திசையெங்கும் நிலைத்திருக்கின்றன.

இன்னும் பல நூற்றாண்டுக்கான கழகத்தின் தேவையுணர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் ‘கடமை- கண்ணியம்- கட்டுப்பாடு’ எனும் கட்டளைகளை நெஞ்சிலேந்தி கழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கப் பவள விழா ஆண்டில் உறுதியேற்போம்!

கழகத்தின் வளர்ச்சியைக் கட்டமைக்கும் கழக நிர்வாகிகளுக்கான அங்கிகாரம் வழங்கிட முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவில் கழக விருது வழங்கப்படுகிறது.

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள நான்கு கழக மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியில் சிறப்பாகச் செயல்படும் தலா ஒருவருக்கு என மொத்தம் 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி கவுரவிக்கிறது கழகம். இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

இன்றைய திமுக பவள விழா மாநாட்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!”
– எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *