vijay

TVK கொடியில் வரும் அந்த Symbol? யாருமே யோசிக்காத மாஸ்டர் ப்ளான் – பழுத்த அரசியல் தலைகளே மிரளும் ஸ்ட்ரேட்டஜி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடுக்காக திட்டமிட்டு வரும் நிலையில், பனையூரில் கட்சிக் கொடிக் கம்பத்தை ஊன்றி பணிகளை தொடங்கியுள்ளது கட்சித் தலைமை. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்… சினிமாவுக்கு பிரேக் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து அரசியல் பணிகளில் பிசியாக இருக்கிறார் நடிகர் விஜய்… பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கியது முதல் வாழ்த்து செய்தியை மட்டுமே அதன் தலைவர் விஜய் பகிர்ந்து வருவதாக விமர்சனங்களை கடந்து தற்போது கட்சி கொடிக்கான கம்பத்தை ஊன்றும் நிலைக்கு வந்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். ஏற்கனவே நீலம், வெள்ளை நிறத்தில் விஜய் மக்கள் இயக்கக் கொடி உள்ள நிலையில், கட்சிக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்கிட பல நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமத்துவம், தமிழ்நாட்டின் வளம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் வகையில் கொடி வடிவமைக்க திட்டமிட்டு வந்த கட்சி, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலரை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2 விதமான கொடிகள் தயாராகியுள்ளதாக கூறப்படும் சூழலில், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் கொடியை அறிமுகப்படுத்துவார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடி அறிமுக தினத்திற்கான ஒத்திகையும் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. திங்கட்கிழமையன்று பௌர்ணமி தினம் என்பதால், 19ம் தேதியே விஜய் முன்னிலையில் மஞ்சள் நிறத்தில் கொடியேற்ற ஒத்திகை நடைபெற்றது. ஆகஸ்ட் 22ம் தேதி கொடி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நிகழ்வுக்கு முக்கிய பொறுப்பாளர்கள் மட்டுமே அனுமதியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். தமிழகம், புதுச்சேரியில் இருந்து சுமார் 300 நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், இதற்காக புஸ்ஸி ஆனந்த் விரதம் மேற்கொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. கொடி அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் மாதமே நடக்க, தி கோட் திரைப்படத்தின் ரிலீசும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காரணம், தி கோட் திரைப்படம் ரிலீசின் போது, முக்கிய திரையரங்குகளில் பேனர் வைப்பதோடு, கொடிக்கம்பங்களையும் வைத்து ரசிகர்கள் கொடியேற்ற திட்டமிட்டுள்ளனர். முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பொதுமக்களின் கூட்டமும் வரும் என்பதால், கட்சிக்கொடியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இந்த மாஸ்டர் ப்ளான் என கூறப்படுகிறது. தற்போது கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வரும் சூழலில், முக்கிய நகர் பகுதிகள், வார்டுகளில் உரிய அனுமதி பெற்று கட்சிக்கொடியை ஏற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது கட்சித் தலைமை. மாநாடு நடப்பதற்குள் கட்சி கொடியை மக்கள் மனதில் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியுள்ள கட்சித்தலைமை, செப்டம்பருக்குள் மாநாட்டையும் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு வருகிறதாம். மதுரை, திருச்சி, சேலம், உள்ளிட்ட இடங்களை பரிசீலித்து வந்த நிலையில், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநாடு நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது தமிழக வெற்றிக்கழகம். அத்துடன், அக்டோபர் முதல் தனது 69வது படத்தில் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளதால், செப்டம்பர் 22 முதல் 30ம் தேதிக்குள் மாநாடு நடைபெறும் என கூறப்படுகிறது. முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் பரபரத்து வருகிறது பனையூர் தலைமை அலுவலகம்.. அதேநேரம் தவெக அரசியல் களமும் சூடுபிடித்திருக்கிறது..

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *