தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை, நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் துஷாரா விஜயனின் ‘துர்கா’ கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படம் ‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ‘துர்கா’ கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்று துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.
படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக ‘ராயன்’ உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
எங்கள் இயக்குனர் தனுசுக்கும். சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ‘துர்கா’விற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை.
தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நன்றி dailythanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *