சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர்களின் வாரிசுகள் அடுத்து சினிமாவுக்குள் வரத்தொடங்கி விட்டனர். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அசத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து தளபதி விஜய்யின் மகன் லைகா தயாரிப்பில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியாவும் ஆவணப்படத்தை இயக்கி தானும் இயக்குநர் ஆகப் போகிறேன் என்பதை நிரூபித்துள்ளார்.

சிவகுமாரின் மகனான சூர்யா அப்பாவை போல சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் தம்பி கார்த்தியும் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்பத்தை கவனித்து வந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். மும்பையில் செட்டில்: சென்னையில் கூட்டுக் குடும்பமாக மாமனார் சிவகுமார் வீட்டில் வசித்து வந்த ஜோதிகா கடந்த ஆண்டு கணவர் சூர்யாவை அழைத்துக் கொண்டு மும்பையில் புதிதாக வீடு வாங்கி குடியேறினார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களை தாண்டி மலையாளத்தில் மம்மூட்டி படம், இந்தியில் அஜய் தேவ்கன் படம் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. சென்னையில் சூர்யா: நடிகர் சூர்யா மும்பைக்கும் சென்னைக்கும் பறந்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். கங்குவா படத்தின் ரிலீஸ் வேலைகள் மற்றும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்டவைக்காக சென்னையிலேயே அதிக நாட்கள் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர். அதை வைத்து தான் தேவையற்ற வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால், சூர்யா மற்றும் ஜோதிகா இடையே எந்தவொரு மனக்கசப்பும் இல்லை என்றும் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

இயக்குநரான தியா: சூர்யா மற்றும் ஜோதிகாவின் மூத்த மகளான தியா சமீபத்தில் இயக்கிய லீடிங் லைட் ஆவண குறும்படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரு விருதுகளை பெற்றுள்ளார். தனது மகள் விருது வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுகிறேன் மகளே, யாரும் கண்டுக் கொள்ளாதவர்கள் மீதும் பலருக்கும் வெளிச்சம் கொடுத்துவிட்டு இருட்டில் இருக்கும் பெண்கள் பற்றிய டாக்குமென்டரியை எடுத்து அசத்திவிட்டாய் என அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மாதவன் முதல் ராதிகா வரை வாழ்த்து: சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா சூர்யாவின் ஆவணப்படத்தை பார்த்து விட்டு நடிகர் மாதவன், நடிகை ராதிகா சரத்குமார், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் தியாவுக்கும் அவரது அம்மா ஜோதிகாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் இன்ஸ்டாகிராமில் எந்தவொரு கமெண்ட்டும் போடவில்லையே ஏன் என தனி பஞ்சாய்த்து ஒன்றும் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் மகன் போல: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயும் இதே போலத்தான் சினிமாவுக்கான படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது Junction, Pull the Trigger என இரு குறும்படங்களை இயக்கி யூடியூபில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பெரிய படமே இயக்கப் போகிறார். இந்நிலையில், விஜய் மகனை போலவே தற்போது சூர்யாவின் மகளும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே அவரும் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக போகிறார் எனக் கூறுகின்றனர்.

அம்மாவை வைத்து படம்: அம்மா ஜோதிகாவை வைத்து தனது முதல் படத்தை இயக்கும் திட்டத்திலும் தியா சூர்யா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனது படிப்பு மொத்தத்தையும் முடித்த பின்னர் தான் சினிமா பக்கம் தியா வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி filmibeat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *