10th12th

Achievements of Tamil Nadu School Education Department : தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்து வகையில் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட திட்டங்களை பற்றி பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் , நான் முதல்வன் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசின் சிறப்பு திட்டங்களாக புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் ஆகியவற்றின் மூலம் கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் :
2021-2024 ஆம் ஆண்டில் பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.394.89 கோடியில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்கான பணி ஆணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில், 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.41.856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன்மிகு வகுப்பறைகள் :

2021-22ஆம் ஆண்டில் 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.20.76 கோடியும், 2022-23ஆம் ஆண்டில் 12,500 தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.230 கோடியும், 2023-24ஆம் ஆண்டில் 7500 தொடக்கப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கிட ரூ.150 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 20,865 அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டில், 6,179 அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைத்திட ரூ.117.401 கோடி மற்றும் ரூ. 1,750 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க ரூ.33,250 கோடி அனுமதிக்கப்பட்டது. 2021-22 முதல் 2024-25 வரை 28,794 பள்ளிகளில் 551.411 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் :

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரைத் திருநகரில் தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் 25.8.2023 அன்று முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் அரசு அறிவிக்கப்பட்டது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.

காடு / மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி :

2023-24 ஆம் ஆண்டில் தொலைதூர / அடர்ந்த காடு / மலைப் பகுதிகளில் உள்ள 1692 குடியிருப்புகளைச் சேர்ந்த தொடக்கநிலை முதல் உயர்நிலை வரையில் படிக்கும் 27,707 மாணவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்றுவர போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகளையும் ஏற்படுத்தினார்கள். இதனால், குழந்தைகள் அச்சமில்லாமல் பள்ளிகளுக்கு வந்து பயில்வது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம் :

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் “நலம்நாடி” என்னும் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம் :
4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர்களுக்கான மொத்தம் 14.019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கற்பித்தல் பணி தடையின்றி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 76 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்பத் தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் 101 கோடியே 48 இலட்சம் ரூபாய்ச் செலவில் கைக் கணினிகள் (Tablet) வழங்க ஆவன செய்துள்ளார்கள்.

நான் முதல்வன் திட்டம் :

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9-12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு. ஏறத்தாழ 10 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு :

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மூலம் 11-ஆம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் :

கிராமப்புற மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியாக 3,44,144 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ரூ.165.84 கோடி செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் :

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப்பெண்” திட்டம், அதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் ஆகியவற்றில் ஏறத்தாழ 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் பயன் பெறுகின்றனர்.

மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரின் பாராட்டு :
புதுதில்லியில் 13.8.2024 அன்று மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் (National Institute of Ranking Framework- NIRF) இடம் பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும்மேலும் உயர்த்தியுள்ளன. அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 80 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்திரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *