cinema

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி’ பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’ அதிரடியான திகிலூட்டும் திரைப்படமான இப்படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரே ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேய்யின் அட்டகாசம் ரசிகர்களுக்கு திகிலூட்டியது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து விக்ரமனை வைத்து கோப்ரா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து தற்போது டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவி சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைந்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது. ஆகஸ்ட் 15ந் தேதி படம் வெளியாக இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவை நடைபெற்ற ப்ரோமோஷனில் பேசிய அருள் நிதி, இந்த படம் வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும் எனவும், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும் எனவும் தெரிவித்தார்.

முதல் விமர்சனம்: இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், படத்தின் முதல் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வாவ்… டிமாண்டி காலனி 2 என்ன ஒரு அருமையான திரைக்கதை, ஆகஸ்ட் 15ந் தேதி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையை பற்றி தான் பேசப்போகிறார்கள். மகாராஜாவுக்கு பின் டிமாண்டி காலனி 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதில் நாங்கள் மிகவும் லக்கி என குறிப்பிட்டுள்ளார். படம் பார்த்த மற்றொருவர், டிமாண்டி காலனி 2 மாதிரி ஒரு பேய் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இரண்டரை மணிநேரமும் என் போனை நான் எடுக்கவில்லை, சீட் நுனியில் அமர்ந்து தான் படம் பார்த்தேன் என்று பகிர்ந்துள்ளார். மோத உள்ள படங்கள்: ஆகஸ்ட் 15ந் தேதி சுகந்திர தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படமும், கீர்த்தி சுரேஷின் ரகு தாதா திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் டிமாண்டி காலனி 2 வெளியாக உள்ளது. இதில் எந்த படம் வசூலில் மாஸ் காட்டப்போகிறது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.

நன்றி filmibeat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *