பாராலிம்பிக் 2024பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ
பாராலிம்பிக் 2024 போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ

உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவன்.

தமிழ்நாட்டின் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன், பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக களமிறங்கவுள்ளார்.

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை, பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் 2024இல், மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள் என 4,400 வீரர்/வீராங்கனைகள், 549 பதக்கங்களுக்காக 22 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

அதில் பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் தமிழ்நாட்டின் நித்ய ஸ்ரீ சிவன்.

‘11 வயது முதல் பேட்மிண்டனில் ஆர்வம்’

தனது 11வது வயதில் (2016) பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய நித்ய ஸ்ரீ, மாற்றுத்திறனாளிகளுக்கென பாரா போட்டிகள் இருப்பதை 2019இல் தான் தெரிந்துகொண்டார்.

பாரிஸ் நகரில், நாளை (28 ஆகஸ்ட்) தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நித்ய ஸ்ரீ தொலைபேசி மூலமாக பிபிசி தமிழிடம் பேசினார்.

“அப்பாவும், அண்ணனும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமென அப்பா என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பார்த்தபோது, எனக்கான விளையாட்டு பேட்மிண்டன்தான் என்பதை முடிவு செய்தேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.

உள்ளூரில் ஒரு பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் இணைந்து விளையாடத் தொடங்கியவர், முதலில் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்துள்ளார்.

“அப்பாவின் நண்பர் ஒருவர் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். அவர் தான் எனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, பாரா போட்டிகள் குறித்து எடுத்துக் கூறினார். அதுவரை பொழுதுபோக்காக மட்டுமே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நான், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் நித்ய ஸ்ரீ.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் நித்ய ஸ்ரீ தங்கம் வென்றார்.

“பின்னர் வேறு சில மாநில அளவிலான போட்டிகள், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகள் என கலந்துகொள்ளத் தொடங்கினேன். அப்போது தான் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணாவின் அறிமுகம் கிடைத்தது” என்கிறார் நித்ய ஸ்ரீ.


‘அதிகம் பேசாத, திறமையான ஒரு வீராங்கனை’

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது ‘கௌரவ் கண்ணா பேட்மிண்டன் அகாடெமி’. இதை நடத்துபவர் இந்திய பாரா பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா.

இந்தியாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களில் முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு, 2020இல் துரோணாச்சார்யா விருதும் (விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான விருது), 2024இல் பத்ம ஸ்ரீ விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

“முதன்முதலில் நித்ய ஸ்ரீ பேட்மிண்டன் விளையாடியதைப் பார்த்தபோது, யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் மிகவும் திறமையான ஒரு வீராங்கனை என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது திறமைக்காகத் தான் இங்கு பேட்மிண்டன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்தோம்” என்று பிபிசியிடம் கூறினார் கௌரவ் கண்ணா.

பஹ்ரைனில், 2021இல் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி தான் நித்ய ஸ்ரீ கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி.

“அப்போது நித்ய ஸ்ரீ மிகவும் பதற்றமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அது வீண் போகவும் இல்லை” என்கிறார் கௌரவ் கண்ணா.

பஹ்ரைனில் நடைபெற்ற போட்டிகளில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார் நித்ய ஸ்ரீ.

அதன் பிறகு 2022இல் ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ‘உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில்’ பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என் மூன்று பிரிவுகளிலும் வெண்கலப் பதக்கம் வென்றார் நித்ய ஸ்ரீ.

“2022 ஆசிய பாரா போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றது, அதே ஆண்டு பெருவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் என அவரது வெற்றி தொடர்ந்தது” என்று கூறுகிறார் கௌரவ் கண்ணா.

நித்ய ஸ்ரீயின் உயரம் மற்றும் உடலமைப்பு காரணமாக, மற்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளோடு ஒப்பிடுகையில் அவருக்கு சில கூடுதல் சவால்கள் உள்ளன என்கிறார் அவர்.

“அவர் கடந்த சில மாதங்களாக கடும் முதுகு வலியால் அவதிப்படுகிறார். இருந்தும் ஒருநாள் கூட பயிற்சியைத் தவறவிட்டதில்லை. அவருக்கென பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.” என்கிறார் கௌரவ் கண்ணா.

மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு

கடந்த ஜூலை மாதம், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 7 லட்சம் வீதம், 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கி சுடுதல்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்), நித்ய ஸ்ரீ சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் சிவரஞ்சன் சோலைமலை (பாரா பேட்மிண்டன்) ஆகியோரே அந்த 5 பேர்.

“மத்திய மற்றும் மாநில அரசுகள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. முதல்முறையாக நித்ய ஸ்ரீ பாராலிம்பிற்கு தகுதி பெற்றுள்ளார். அவர் நிச்சயம் தங்கம் வெல்வார்” என்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா.

‘உருவக் கேலிகளில் இருந்து மீண்டுவர உதவிய விளையாட்டு’

“உருவக் கேலிகள் என்பது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. எனது பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்துவிட்டார்களே என வருத்தம் இருந்தது. அதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பதான் விளையாட்டில் கவனம் செலுத்த ஊக்குவித்தேன்” எனக் கூறுகிறார் நித்ய ஸ்ரீயின் தந்தை சிவன்.

தொடர்ந்து பேசிய அவர், “நித்ய ஸ்ரீ பிறந்த சில மாதங்களில் எனது மனைவி இறந்துவிட்டாள். பாட்டியின் அரவணைப்பில் தான் அவள் வளர்ந்தாள். பேட்மிண்டன் போட்டிகளில் அவளது திறமையைப் பார்த்துவிட்டு பயிற்சியாளர் கௌரவ் கண்ணன் லக்னோ வரச் சொன்னபோது, உறவினர்கள் பலரும் அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள்” என்கிறார் சிவன்.

அடுத்தடுத்து நித்ய ஸ்ரீ பெற்ற வெற்றிகளால், எதிர்ப்பு தெரிவித்த உறவினர்களே பாராட்டியதாகவும் கூறுகிறார் அவர்.

உருவக் கேலிகள், அவமானங்கள் மட்டுமல்லாது, உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல்ரீதியாகவும் பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான், நித்ய ஸ்ரீ இந்த உயரத்தை அடைந்திருப்பதாகக் கூறுகிறார் சிவன்.

“பாராலிம்பிக் போட்டிகளில் இப்போது பல நாடுகள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளன. போட்டிகள் கடுமையாக உள்ளன. தங்கம் வெல்ல வேண்டும் என்பதைத் தாண்டி, இறுதிவரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். சிறுவயது முதலே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடமும் அதுதான்” என்று கூறிவிட்டு தனது பேட்மிண்டன் பயிற்சியைத் தொடரச் சென்றார் நித்ய ஸ்ரீ சிவன்.

பாரிஸ் நகரில், ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நித்ய ஸ்ரீ கலந்துகொள்ளும் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறவுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சிவரஞ்சன் சோலைமலையுடனும் களமிறங்கவுள்ளார் நித்ய ஸ்ரீ.

நன்றி BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *