job

தமிழக அரசு TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்கள் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வேலைக்காக வெளியே வருகின்றனர். ஆனால் பல இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுக்கு பயிற்சி

பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசு வேலைதான் வேண்டும் என உறுதியாக உள்ள இளைஞர்களுக்கும் மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசு பணியிடங்களில் சேர்வதற்கான பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது

இலவச பயிற்சி தரும் தமிழக அரசு

இந்த இலவச பயிற்சி வகுப்புகள்  சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை. சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

விண்ணப்பிக்க அழைப்பு

பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

தொடர்பு கொள்ள

பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 25954905 044 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் மாதம் முதல் பயிற்சி

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி tamil.asianetnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *